குரூப் 2 தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என, டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எனினும், முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள, ஒரே டிஎன்பிஎஸ்சி கோட்சிங் சென்டரில் இருந்து, சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சிப் பெற்றதைத் தொடர்ந்து, சந்தேகம் எழுப்பப்பட்டது. அதில், முதல் நூறு இடங்களில் 35 பேர் இடம் பெற்று இருந்தனர். இதனால், டிஎன்பிஎஸ்சி மீது சந்தேகம் உள்ளது என, தேர்வு எழுதியவர்கள் புகார் கூறினர்.
இதற்கு விளக்கமளித்துள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், கடந்த குரூப் 2 தேர்வில் சுமார் 32,879 பேர் 128 தேர்வு மையங்களில், தங்களுடையத் தேர்வுகளை எழுதினர். அதில், 497 பேர் மட்டுமே சான்றிதழ்களை சரிபார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில், இராமேஷ்வரத்தில் இருந்து தேர்வாகிய 57 நபர்களும், ஒரே அறையிலோ அல்லது ஒரே தேர்வு மையத்திலோ தேர்வு எழுதவில்லை. மேலும், முதல் 1000 இடங்களுக்குள் 40 பேர் இடம் பெற்றும் உள்ளனர் என்று விளக்கமளித்துள்ளது. இருப்பினும், சந்தேகம் முன்வைக்கப்பட்டதற்காக, அவர்களுடைய விடைத்தாளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளது.
வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.