உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சமயத்தில், சீனா வங்கிகள் சப்தமில்லாமல், மற்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.
ஏற்கனவே, பல நாடுகளில் உள்ள மருத்துவ நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் முயற்சியில் சீன நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த செயலைத் தற்பொழுது இந்தியாவிலும் செய்ய ஆரம்பித்து உள்ளனர். இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் மிகவும் பிரபலமான வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகளை சீன மத்திய வங்கி வாங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகளானது, அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தன. அந்த வங்கியின் ஒரு பங்கானது ஜனவரி 1ம் தேதி அன்று 2,433.75 ரூபாயாக இருந்தது. இது மார்ச் 31ம் தேதி அன்று 1630.45 ரூபாயக குறைந்து விட்டது. இந்தியாவில், விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, பொதுமக்கள் வெளியில் வரவில்லை.
இதனால், அந்த வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் தடைபட்டன. ஊரடங்கின் காரணமாக, அந்த வங்கியானது மூடப்பட்டது. அதன், ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே, தற்பொழுது அனுமதிக்கப்பட்டு உள்ளன. மூன்று, மாதங்களுக்கு தவணையோ அல்லது வட்டியோ வாங்கக் கூடாது என, மத்திய அரசு தடையும் விதித்தது. இதனால், அந்த வங்கியின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்த சமயத்தினைப் பயன்படுத்திக் கொண்ட, சீன மத்திய வங்கியானது, சுமார், 1,74,92,909 பங்குகளை வாங்கிக் குவித்துள்ளது. இது, ஹெச்டிஎப்சி மதிப்பில் 1.01% ஆகும். இந்த பங்குகளை வாங்குவதன் மூலம், இந்தியாவிலும் தற்பொழுது தங்களுடைய முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளது சீனா. எப்பொழுதும், சீன மத்திய வங்கியானது, தங்கம், வெளிநாட்டு பணம், பத்திரங்கள், ஆகியவைகளில் அதிகளவில் முதலீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.