தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, தற்பொழுது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைப் பெய்து வருகின்றது.
வட கிழக்குப் பருவமழையானது, கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்தது. அதனையடுத்து, பானி புயல் மற்றும் கியார் புயல், புல்புல் புயல் என மூன்று புயல்கள் கரையைக் கடந்துவிட்டன. தொடர்ந்து, தமிழகத்தின் பல இடங்களில் விட்டு விட்டு மழைப் பெய்து வந்தது.
கடந்த ஒரு வாரமாக வெயிலானது, மக்களை வாட்டி எடுத்தது. இந்த சூழ்நிலையில் வெப்பசலனத்தின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைப் பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனையடுத்து சென்னை, நாகப்பட்டினம், திருவாரூர், கோவை, அரியலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கடலூரில், பேய் மழையின் காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததன் காரணமாக, குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.