ஆன்லைனில் பாடம் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில், தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள், அதிகமாகப் பரவி வருகின்ற காரணத்தால், ஊரடங்கு உத்தரவானது வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டினை தொடங்குவதிலும், தொடர்வதிலும் பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்த சூழ்நிலையில், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அமர்வு விசாரித்தது. அப்பொழுது, மாணவர்கள் இணையதளத்தில் படிக்கும் பொழுது, ஆபாச இணையதளங்களின் விளம்பரங்களால் கவனச் சிதறல் ஏற்படுதவற்கு வாய்ப்புகள் உள்ளதாக மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கூறினார். மேலும், இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இது விசாரித்த நீதிபதிகள், இடைக்காலத் தடையினை தற்பொழுது நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விதிக்க முடியாது எனக் கூறினர். மேலும், இணைய வழிக் கல்விக்கு ஏதேனும் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதா எனவும், திட்டங்கள் எதுவும் உள்ளதா எனவும், மத்திய மாநில அரசுகளிடம் கேள்வி கேட்டுள்ளனர். வருகின்ற ஜூன் 20ம் தேதி அன்று, அதற்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.