தமிழகத்தில் இன்று (24-03-2020) மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வர உள்ளது. இதனால், பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
பயணங்கள் மூலமாகவும், பயணிகள் மூலமாகவும் இந்த கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனை முன்னிட்டு, பொதுப் போக்குவரத்தினை குறைத்தும் உள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைவாக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தினைச் சந்தித்து வருகின்றனர். இன்று மாலைக்குள் தங்களுடைய சொந்த வீட்டிற்கும், சொந்த ஊருக்கும் செல்ல நினைத்த மக்கள் சென்னை கோயம்பேடு, செங்கல்பட்டு, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், கோயம்புத்தூர் பேருந்து நிலையம், மதுரை மாட்டுத்தாவணி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் திரளாகக் குவிந்தனர்.
இதன் காரணமாக, பெரும் நெரிசல் ஏற்பட்டு உள்ளது. வாகனங்களில் இடம் கிடைக்காத காரணத்தினால், வாகனத்தின் டாப்களில் உட்கார்ந்து அபாயகரமானப் பயணத்தினை மேற்கொள்கின்றனர். இதனை, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டப் பலரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். இரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேறு வழியின்றி கிடைத்த வாகனங்களில் ஏறி, தன்னுடைய சொந்த ஊருக்கு பொதுமக்கள் அபாயகரமானப் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.