இந்தியாவிலேயே முதன் முதலாக கல்விக்கென புதியதாக தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை இன்று காலை ஆரம்பித்த பின் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டம் நன்றாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நம்மைப் பாராட்டி உள்ளார் எனப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கல்வித் தொலைக்காட்சியினை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் திரு.பழனிசாமி. முதலில் சோதனையின் அடிப்படையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த டிவி, பின்னர் இன்று முதல் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் இந்த தொலைக்காட்சி இயக்கப்பட உள்ளது. மேலும், இந்தத் தொலைக்காட்சி அண்ணா நூலகத்தின் ஒரு தளத்தில் இயங்கி வருகிறது. இதனை ஆசிரியர்கள், நூலாசிரியர்கள் மற்றும் கல்வித்துறைச் சார்ந்த நிபுணர்கள் வழிநடத்துகின்றனர்.
இந்தக் கல்வித் தொலைக்காட்சியில், பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாவது எப்படி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், வேலைவாய்ப்பு, சுய தொழில் மற்றும் நன்னெறி உட்பட பலவகையான தகவல்களும், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.