இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பல நிறுவனங்கள் கிட்டத்தட்ட நஷ்டத்தினை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, சீனா நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை வாங்கிக் குவித்து வருகின்றன.
தற்பொழுது, ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் ஒரு சதவிகித பங்குகளை, சீனாவின் பெடரல் பேங்க் வாங்கியுள்ளது. இது தொடர்ந்து நீடித்தால், இந்தியாவின் பல நிறுவனங்களை சீன நிறுவனங்களும், வங்கிகளும் வாங்கிவிடும் அபாயம் உண்டானது. இதனால், மத்திய அரசு சில அதிரடி மாற்றங்களை அந்நிய முதலீட்டில் உருவாக்கியது. இதனால், தற்பொழுது சீனா விரக்தியில் உள்ளது எனலாம்.
இந்திய அரசின் புதிய மாற்றங்களால் இனி ஒரு சிலக் குறிப்பிட்ட நேரடி முதலீடுகளை, வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் பொழுதோ அல்லது இந்திய நிறுவனங்களை வாங்கும் பொழுதோ, இந்திய அரசின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் செய்யக் கூடிய முதலீட்டிற்கும், மத்திய அரசின் அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாலும், மத்திய அரசின் உரிமையைப் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.
இதனால், சீன அரசாங்கம் மொத்தமாக அதிருப்தியில் உள்ளது. இதனால், அந்த நாட்டு நிறுவனங்களால் இனி நேரடியாக, இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்க இயலாது. இது மாபெரும் முடிவு ஆகும். இதற்கு சீனாவின் தூதரகச் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் பேசுகையில், இந்தியாவின் இந்த மாற்றங்கள் அனைத்தும், முற்றிலும் ஜி-20 அமைப்பின் முடிவிற்கு எதிரானது. இது தாராள பொருளாதாரமயமாக்கலுக்குத் தடையான ஒன்றாகும். இதனால், நாடுகளுக்கு இடையில் உள்ள ஒருமித்தக் கருத்துக்களும் வேறுபாடுகளை சந்திக்கும் என்றுக் கூறியுள்ளார். இதுவே, சீனாவின் நேரடியான அதிருப்தியின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.