மனிதாபிமானத்தின் அடிப்படையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தினை நேச நாடுகளுக்கு வழங்க இந்திய அரசாங்கம் முன் வந்துள்ளது.
அமெரிக்காவில் தற்பொழுது இந்த கொரோனா வைரஸ் காரணமாக, 13,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அவர்களுக்கு மருத்துவம் செய்ய ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் அதிகளவில் தேவைப்படுவதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் என் நண்பர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம், மருந்து வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஒரு வேளை, மருந்து அங்கிருந்து கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அதற்கானப் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று காலையில் மத்திய வெளியுறவுத் துறை சார்பில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இந்தியாவின் நேச நாடுகளில் இந்தப் பாதிப்பானது அதிகமாக உள்ளது. அதனைப் பொருட்டு, அந்நாடுகளுக்குத் தேவைக்கேற்ப அளவில், இந்த மருந்தானது வழங்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸானது பரவி வருவதால், வெளிநாடுகளுக்கு செல்ல இந்தியா தடை விதித்துள்ளது.
இருப்பினும், பொதுநலன் கருதியும், உலக மக்களின் நலன் கருதியும், விரைவாக இந்த மருந்தினை அனுப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.