இந்தியாவில் உள்ள கேரளாவில், கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்து இரண்டு இந்தியர்களும், பூரணக் குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் மூலம், தற்பொழுது வரை 1300க்கும் மேற்பட்டோர், மரணமடைந்து உள்ளனர். இந்நிலையில், சீனாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் இந்த வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து, இந்தியாவிற்கு வந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இந்தப் பாதிப்பினைத் தொடர்ந்து, அந்த மாணவி கேரளாவின் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை தனிமைப்படுத்திய மருத்துவர்கள், சிறப்பு மருத்துவக் குழு மூலம், சிகிச்சை அளித்து வந்தனர். இவரைப் போலவே, கேரளாவிற்கு வந்த மற்ற இரண்டு மாணவர்களுக்கும், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் மருந்தின் காரணமாக, அந்தப் பெண்ணிற்கும், ஒரு மாணவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு நீங்கியுள்ளது என்றத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதனை உறுதி செய்யும் பொருட்டு, அவர்களுடைய இரத்த மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்தால், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்களா என எதிர்பார்க்கப்படுகின்றது.