உத்திரப்பிரதேசத்தின் பல இடங்களில், திருத்தப்பட்ட தேசியக் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. இதனால், மேலும் இந்தப் போராட்டம் பரவாமல் இருக்க, முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் இணையத்தினை கட் செய்துள்ளது அரசு.
கடந்த இரண்டு வாரங்களாக, நாடு முழுவதும், திருத்தப்பட்ட தேசியக் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒரு சில இடங்களில், வன்முறைச் சம்பவங்களும், கலவரங்களும் நடைபெற்றுள்ளன. இந்தப் போராட்டங்களால், பலர் உயிரிழந்துள்ளனர். பெரிய அளவில் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
கடந்த புதன் கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடப்பட்டதால், போராட்டமானது, பெரிய அளவில் நடைபெறவில்லை. வலுவிழந்து வந்த போராட்டத்தினை நினைத்து, இயல்பு நிலை திரும்பிவிட்டதாக நினைத்த நிலையில், மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலமான, உத்திரப்பிரதேச மாநிலத்தில், தற்பொழுது போராட்டமானது மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், போராட்டமானது, மேலும் மாநிலம் முழுவதும் பரவாமல் இருக்க 12 மாவட்டங்களில் இணைய சேவையினை அம்மாநில அரசு முடக்கி உள்ளது. இதனால், போராட்டமானது, மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருக்கும் எனப்படுகின்றது.