கடந்த இரண்டு வாரங்களாக, அசாம் மாநிலத்தின் பலப் பகுதிகளில் தேசியக் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், அங்கு கடந்த 10 நாட்களாக, இணைய சேவைத் துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, தற்பொழுது அங்கு போராட்டத்தின் வீரியம் குறைந்துள்ளதால், மீண்டும் இணைய சேவையானது வழங்கப்பட்டு வருகின்றது. இதனை, அம்மாநில முதல்வர் சர்பானந்த் சோனாவால் தெரிவித்துள்ளார்.
இன்று, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அசாம் மாநில மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும், அவர்களுடைய கலாச்சாரம், மொழி உட்பட அனைத்தும் பாதுகாக்கப்படும் எனவும், ஒவ்வொரு அசாம் மாநில மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
அசாம் மாநிலத்தில் உள்ள, கவுகாத்தி உட்பட பல மாவட்டங்களில், டிசம்பர் 9ம் தேதி முதல் இணைய சேவையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. பல இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, தற்பொழுது இணைய சேவையானது மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றது என, அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.