ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான, மாலியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், பிரான்ஸ் வீரர் உட்பட மொத்தம் 50 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்நாட்டில் தொடர்ந்து, மதக் கலவரம் மற்றும் இனக் கலவரம் நடைபெற்று வருகின்றது. இந்தக் கலவரத்தில் அப்பாவி பெண்கள் உட்பட, பலரும் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அன்தெலிமான் என்ற பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில், திடீரென்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக சுட்டனர். பின்னர், கையில் இருந்த குண்டுகளை வீசி வெடிக்கவும் செய்தனர்.
இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத வீரர்கள், நிலைமையை சுதாரிப்பதற்குள் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்தத் தாக்குதலில், பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த வீரர் உட்பட சுமார் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு சில வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனை யார் நடத்தினார்கள் என, தொடர்ந்து மாலி போலீசாரும், ராணுவத்தினரும் விசாரித்து வந்த நிலையில், நேற்று மாலை இதனை நாங்களே செய்தோம் என, ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.