வருகின்ற ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இதனை உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் கொண்டாட உள்ளனர்.
வருடா வருடம், தைத் திங்கள் முதல் நாளன்று பொங்கல் திருவிழாவானது, தமிழர்களால் மிகவும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. தை முதல் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தைப் பொங்கலும், அடுத்த நாள் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கலும், அதற்கு அடுத்த நாள் பெரியவர்களிடம் ஆசி வாங்கும் விதத்தில், காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பொங்கலுக்குப் பொதுவாக மூன்று நாட்களும் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு அடுத்த நாள் பள்ளி மாணவர்கள் தங்களுடையப் பள்ளிக்கு கண்டிப்பாக வர வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
வருகின்ற ஜனவரி 16ம் தேதி அன்று, பாரதப் பிரதமர் மோடி அவர்கள், டெல்லியில் உள்ள பள்ளியில் மாணவர்களுடன் பேசி உரையாட உள்ளார். அதனால், அவருடையப் பேச்சினை அனைத்து மாணவர்களும் கேட்க வேண்டும் எனவும், அதற்காக மாணவர்கள் பள்ளிகளுக்கு கட்டாயம் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாயம் வருகைப் பதிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த மூன்று நாட்களும் அரசு விடுமுறை என, ஏற்கனவே அரசாங்கம் வெளியிட்டுள்ள காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் வீட்டில் இருந்தும் மோடியின் உரையினைக் கேட்கலாம், பள்ளிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.