விசாகப்பட்டினத்தில் தற்பொழுது விஷ வாயு கசிவின் காரணமாக, 5,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று அதிகாலை மூன்று மணியளவில், விசாகப்படினத்தில் அமைந்துள்ள எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில், விஷ வாயு கசிய ஆரம்பித்தது. இதனால், அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு, கடுமையான கண் எரிச்சல், மூச்சுத் திணறல், மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, இந்த விஷ வாயுக் கசிவானது வேகமாகக் காற்றில் பரவியதால், 13 பேர் தற்பொழுது வரை, மரணமடைந்து உள்ளனர். இதனிடையே, அந்தத் தொழிற்சாலை அமைந்துள்ளப் பகுதியினை சுற்றி இருக்கின்ற மக்கள், வீட்டினை விட்டு வெளியில் வர வேண்டாம் என, போலீசார் கேட்டுக் கொண்டனர்.
உடனடியாக, விசாகப்பட்டினத்திற்கு, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைந்தார். அவர் கூறுகையில், உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளதாகவும், போலீசாரும், மீட்புத்துறையினரும் கடுமையாகப் போராடி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாயானது, நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார்.