சென்னை பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்தது. அதனால், பின்னால் வந்த லாரி ஏறி படுகாயமடைந்த சுபஸ்ரீ என்ற பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து, தமிழகத்தில் பேனர் வைக்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக, பேனர் வைத்த, அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் மேகநாதன் என்பவரைத் தமிழகக் காவல்துறை கைது செய்தது.
இதனால், ஜாமீனிற்கு விண்ணப்பித்திருந்த ஜெயகோபாலின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், அரசு வழக்கறிஞரிடம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், ஸ்டாலின் மருத்துவமனைக்கும் தலா 25,000 வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினர். மறு உத்தரவு வரும் வரை, மதுரையில் தங்கியிருந்து, காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வர வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தனர்.