பாமக கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் காடுவெட்டி குரு. அவர், கடந்த 2018ம் ஆண்டு மரணமடைந்தார். இந்த வாரம், அவருக்கு நினைவஞ்சலி நடத்தப்பட்டது. இந்நிலையில் அவருடைய மருமகன் மனோஜ் சகோதரர் மதனிற்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு உள்ளது.
நேற்று இரவு அருண் என்பவர், காடுவெட்டி குருவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் காமராஜர் என்பவர் அவரை மடக்கி விசாரித்து இருக்கின்றார். பின்னர் தாருமாறாக பேச ஆரம்பிக்கவும், இந்த விஷயத்தினை காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ்ஜிற்கு தகவல் தெரிவித்தார் அருண்.
இதனையொட்டி, மனோஜ் தன் ஆதரவாளர்கள் மற்றும் தன் தம்பியுடன் அப்பகுதிக்கு விரைந்துள்ளார். அங்கு காமராஜர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இருந்துள்ளார். அவர்களுடன் பேசும் பொழுது, பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, மனோஜ்ஜின் சகோதரர் மதன் மீது, அரிவாள் வெட்டுத் தாக்குதலை காமராஜின் குழு செய்துள்ளது.
தலையில் காயம் அடைந்த மதன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரச்சனைகள் எதுவும் ஏற்பட்டு விடாமல் இருக்க, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.