1000 கோடிக்கும் மேல், கணக்கில் வராத சொத்துக்களை கல்கி பகவான் என பெயர் வைத்துக் கொண்ட, விஜயகுமாரிடம் இருந்து கண்டுபிடித்துள்ளது வருமான வரித்துறை.
அவர் 90 கிலோ தங்கம், 4 கோடி மதிப்புள்ள வைர நகைகள், 4000 ஏக்கருக்கும் மேலாக நிலம், பிரிட்டன், ஆப்பிரிக்கா, அரேபியா போன்ற பல நாடுகளில் சொந்தமாகத் தீவு, தனியாக அரண்மனைப் போல ஆசிரமம் என, சொகுசாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் வைத்திருந்திருக்கிறார் சாமியார் எனக் கூறிக் கொள்ளும் கல்கி பகவான். அவருடைய மகன் மற்றும் மருமகள் பெயரிலும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்துள்ளதை, வருமான வரித்துறைக் கண்டுபிடித்துள்ளது.
தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற வருமான வரித் துறையின் சோதனை, நேற்று முடிவடைந்தது. அதில், சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டுப் பணத்தினைப் போலீசார் கைப்பற்றினர். மேலும், கல்கி பகவானுக்குச் சொந்தமான 19 வங்கிக் கணக்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது சட்டத்திற்கு விரோதமாக சுமார் 20 கோடி ரூபாயினை வைத்திருந்தது தொடர்பாக, அமலாக்கத் துறையானது கல்கி பகவானிடம் விசாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவரையும் ப சிதம்பரம் போல், தன்னுடைய கஸ்டெடியில் எடுத்து, அமலாக்கத்துறை விசாரிக்கும் வாய்ப்புகளும் உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.