உலகநாயகனும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு தற்பொழுது காலில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
இது குறித்து, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியானது, அதிகாரப்பூர்வ அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், 2016ம் ஆண்டு படப்பிடிப்பின் பொழுது, எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டது. அதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனுக்கு அப்பொழுது அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால், அவருடைய காலில் டைட்டானியம் பிளேட் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து, படங்கள், அரசியல் என கமல்ஹாசன் பிஸியாகிவிட்டதால், காலில் பொறுதப்பட்ட பிளேட்டினை அகற்றவில்லை. தற்பொழுது, அவருடைய காலில் உள்ள பிளேட்டினை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாளை (22-11-2019) அன்று, கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர் சிறிது கால ஓய்விற்குப் பின் பொதுமக்களை சந்திப்பார் என கூறப்பட்டுள்ளது.