கஜகஸ்தானில், கட்டுப்பாட்டினை இழந்த விமானம், அங்கிருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் மோதியது.
கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி நகரில் இருந்து நூர்சுல்தான் நகருக்கு, இன்று காலையில் பெக் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில், 95 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 100 பேர் பயணித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில், தன்னுடையக் கட்டுப்பாட்டினை விமானம் இழந்தது. விமானிகள் எவ்வளவோ முயற்சி செய்தும், விமானத்தினைக் கட்டுப்படுத்த முடியாததால், விமான நிலைய வேலிகளை உடைத்து, அருகில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் மீது மோதி விழுந்தது.
இந்த விபத்தில், விமானம் நொறுங்கியது. இருப்பினும், எவ்வித தீ விபத்தும் ஏற்படவில்லை. கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது. தற்பொழுது வரை, இந்த விபத்தில் 9 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் குழந்தைகள் உட்பட பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் முதற்கட்ட அறிக்கையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம், பறப்பதற்குத் தேவையான உயரத்தினை அது எட்டாததால், இந்த விபத்து ஏற்பட்டு இருக்கும் என, விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இது பற்றிய விரிவான விசாரணை நடத்தப்படும் என விமான நிலையம் அறிவித்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தன்னுடைய ஆறுதல்களை தெரிவிப்பதாக அந்நாட்டு அதிபர் காசிம்-ஜோமார்ட் டோக்காயேவ் தெரிவித்துள்ளார்.