திருச்சியில் உள்ள கொள்ளிடம் அணைக்கு, கீழே உள்ள பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை, போதை ஆசாமிகள் மிரட்டியதால், காதலன் நீரில் குதித்துவிட்டார். இந்த சம்பவம் தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (30-10-2019) மதியம் மூன்று மணியளவில், கொள்ளிடம் அணைப் பகுதியில் கீழே உட்கார்ந்து, காதல் ஜோடி பேசிக் கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகள் அந்த ஜோடியிடம் வரம்பு மீறிப் பேசியுள்ளனர். அங்கிருந்த காதலனிடம் தகாத வார்த்தைகளால் பேசியிருக்கின்றனர். மேலும், நீங்கள் எதற்கு இங்கு வந்தீர்கள், நீங்கள் யார்? உனக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என சற்றுக் கொச்சையாகப் பேசியுள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த காதலன், ஓடிக் கொண்டிருந்த நீரில் குதித்துள்ளான். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த போதை ஆசாமிகள் தலை தெறிக்க ஓடியுள்ளனர். அங்கு தனியாக நின்று கொண்டிருந்த காதலி நேராக காவல்நிலையம் சென்று, இது குறித்துப் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மாயமான இளைஞன் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவன் என்பதால், அவனையும் ஆற்றில் தேடி வருகின்றனர்.