கோயம்பேடு சந்தைக்குள் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இன்று (29-04-2020) வரை முழு ஊரடங்கு உத்தரவானது பல மாவட்டங்களில் அமலில் உள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதற்கு முன்னர், பல லட்சம் பேர் குவிந்தனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டினை மூன்றாகப் பிரிக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. இருப்பினும், அந்த மார்க்கெட்டினை சேர்ந்தவர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த மூன்று பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஏற்கனவே, இருவருக்கு கொரோனா இருந்த நிலையில், நேற்று இது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த சந்தையானது மூடப்படுகின்றது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, பொதுமக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.