வருகின்ற மே-15ம் தேதிக்குள், ஊரடங்கு நீட்டிப்பது குறித்த திட்டத்தினையும், அதற்கான புதிய விதிகளையும் அறிவிக்க வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. வருகின்ற மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக, இந்த கொரோனா வைரஸ் பரவுவதன் வேகம், அதிகமாக உள்ளது. தமிழகம், சென்னை, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனை முன்னிட்டு, நேற்று நான்காவது முறையாக ஊரடங்கு குறித்தும், மாநிலங்களின் நிலைமைக் குறித்தும் கேட்டறிந்தார். இதில், பல மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் தேவையானவைகள் குறித்துப் பேசியுள்ளனர். இதில் தமிழகத்திற்குத் தேவையானவைகள் பற்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி வரும் வேகம் அதிகரித்து உள்ளதால், உடனடியாக ஊடரங்கினை நீக்க வேண்டாம் எனவும், ஊரடங்கினை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கவும் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, வருகின்ற மே-17ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கானது நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசும், இது குறித்து பரிசீலித்து வருவதாகவும், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், பிற பகுதிகளில் பல ஊரடங்குத் தளர்வுகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.