ஆள் சேர்க்கையின் காரணமாக, கட்சியினை விரிவுபடுத்தும் மக்கள் நீதி மய்யம்!

14 August 2019 அரசியல்
maiamelection1.jpg

தொடர்ந்து சில மாதங்களாக, கமுக்கமாக ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம். அக்கட்சியினரின், அயராத உழைப்பால், பலரும் இக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதனை முன்னிட்டு, கட்சியினை பட்டி தொட்டி எங்கும், விரிவுபடுத்தும் பணியில் அக்கட்சியின் நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் அக்கவுண்டில், இது குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழக அரசியல் மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலம்மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும், தன் பாரம்பரிய பெருமைகளை இழந்து நின்ற சூழலில், அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் மக்களுக்காக பாடுபடும் ஒரு அரசியல் கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலும், என்னால் ஆரம்பிக்கப்பட்டது தான் மக்கள் நீதி மய்யம்.

அதன் காரணமாக நமது கட்சி ஆரம்பித்த, 14 மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை துணிவுடன் சந்தித்தது. அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொள்ளும் வகையிலான பெரும் ஆதரவை, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் அளித்தனர்.

அந்த ஆதரவை மேலும் அதிகப்படுத்தி, வரும் 2021ல் மக்கள் நலம் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட உத்வேகத்துடன் பாடுபடுவதென்று முடிவு செய்து, நமது கட்சியை வலுப்படுத்தும் சில நடவடிக்கைகளை எடுக்க விரும்பினேன். தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம், கட்சி நிர்வாகிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்தேன். அந்த வகையில் நமது கட்சி, தலைவரின் கீழ், துணைத் தலைவர், ஆறு பொதுச் செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் வரை சென்றடைய பொதுச் செயலாளர் அமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கு, மேற்கு & தெற்கு என இரண்டு பதவிகளாக உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடி வரை சென்றடைய பொதுச்செயலாளர் ஒருங்கிணைப்பு என்ற பதவி உருவாக்கப்படுகிறது. இத்துடன் பொதுச்செயலாளர்-கொள்கை பரப்பு, பொதுச்செயலாளர்-சார்பு அணிகள், பொதுச் செயலாளர்–தலைமை அலுவலகம் என்றும் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகத்தினை எளிமைப்படுத்தும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி என்று 8 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு, அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள், நியமிக்கப்படுகிறார்கள். புதிதாக நியமிக்கப்படும் மாநிலச் செயலாளர்கள் அந்தந்த மண்டலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என அறிக்கையை வெளியிட்டுள்ளது மக்கள் நீதி மய்யம்.

அதன்படி, பொதுச்செயலாளர் ஒருங்கிணைப்பாக திரு ஆ. அருணாச்சலம் எம்ஏ பில், பொதுச்செயலாளர் அமைப்பு (வடக்கு&கிழக்கு) திரு. ஏ.ஜி.மௌர்யா ஐபிஎஸ், பொதுச்செயலாளர் அமைப்பு (தெற்கு&மேற்கு) தலைவர் அலுவலகம், பொதுச் செயலாளர் கொள்கை பரப்பு திரு. ஆர்.ரங்கராஜன் எக்ஸ்.ஐஏஎஸ், பொதுச்செயலாளர் சார்பு அணிகள், திருமதி. வி. உமா தேவி பிஎஸ்சி, பொதுச் செயலாளர் தலைவர் அலுவலகம் திரு. பஷீர் அகமது ஐஏஎஸ் என, புதிய பதவிக்கான உறுப்பினர்கள் விவரங்களையும், அந்த அறிக்கையில் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

டாக்டர் ஆர். மகேந்திரன் மற்றும் திரு. ஏ. சந்திரசேகர் ஆகிய இருவரும் தற்பொழுது இருக்கும் பொறுப்புகளில் முறையே, கட்சியின் துணைத் தலைவராகவும், பொருளாளராகவும் தொடர்ந்து செயல்படுவார்கள் எனவும், புதிய பொதுச்செயலாளர்களும் தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியினை அமைத்திட பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன் என, கமல்ஹாசன் கையொப்பமும் இடப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4% அதிகமான வாக்கினைப் பெற்றுள்ள நிலையில், தற்பொழுது புதிய உறுப்பினர்களின் சேர்க்கையினால், கட்சியினை விரிவுபடுத்தியுள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.

HOT NEWS