மங்களூர் விமானநிலையத்தில், வெடிகுண்டு வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதித்யா ராவ்விற்கு, பத்து நாட்கள் போலீஸ் காவல் விதித்துள்ளது நீதிமன்றம்.
மங்களூர் விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டருக்கு அருகில், மர்ம விதத்தில் ஒரு பையானது கேட்பாரற்று கிடந்தது. இதனையடுத்து, அந்தப் பையினை கைப்பற்றிய காவல்துறையினர், அதில் இருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோவில் வந்த மர்ம நபர் தான் அந்தப் பையினை வைத்திருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அந்த நபரின் புகைப்படத்தினை வெளியிட்ட போலீஸார், அவரைத் தீவிரமாகத் தேட ஆரம்பித்தனர். ஆதித்யா ராவ் என்றுப் பெயருடைய நபரின் வீட்டிற்கே போலீசார் சென்றுப் பார்த்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பின்னர், தானாக பெங்களூருவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சரணடைந்தார். அவர் சரணடைந்ததை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்பொழுது, ஆதித்யா ராவ்விடம் விசாரிக்க போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, காவல்தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து, அவரிடம் விசாரிப்பதற்காக 10 நாட்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, ஆதித்யா ராவ்விடம் விசாரணையைத் தொடங்கி உள்ளது காவல்துறை.