பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், ஹாங்காங்கில் முகமூடி அணிய விதிக்கப்பட்ட தடைக்கு, எதிராகவும் போராட ஆரம்பித்துள்ளனர்.
தொடர்ந்து, நூறு நாட்களுக்கும் மேலாக ஹாங்காங் நகரில், அங்குள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்குள்ள கைதிகளை இடமாற்றம் செய்யக் கூடாது எனவும், சீனாவிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும், பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
முதலில், அமைதியாக நடைபெற ஆரம்பித்த இந்தப் போராட்டம், நாளடைவில் கலவரமாக மாறியுள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்து வந்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், கலவரக்காரர்களும் முகமூடி அணிந்து வந்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், யார் கலவரத்தில் ஈடுபடுகின்றனர் என்ற குழப்பம் நிலவி வந்தது.
இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காணும் விதத்தில், இனி ஹாங்காங் நகரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், முகமூடி அணியக்கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து, பத்தாயிரத்திற்கும் அதிகமான போராட்டக்காரர்கள் பேரணி, ஆர்ப்பட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.