கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தாய்லாந்து நாட்டில், இந்த கொரோனா வைரஸால் ஏற்பட்ட நோய்க்கு, மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தாய்லாந்து நாட்டிற்கு சென்ற சீனப் பெண்ணிற்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை தனிமைப்படுத்திய மருத்துவர்கள், தொடர்ந்து பலவித மருந்துகளை அளித்து வந்தனர். ஆனால், அவர் குணமடையவில்லை. இதனால், எய்ட்ஸ் நோய்க்கு கொடுக்கப்பட்டு வந்த தடுப்பு மருந்தினை, இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அளித்தனர். அதற்கும் அவர் உடலில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனை அடுத்து, காய்ச்சலுக்கு கொடுக்கும் மருந்தினையும், எய்ட்ஸ் தடுப்பு மருந்து ஆகிய இரண்டின் கலவையையும் அந்தப் பெண்ணிற்கு அளித்துள்ளனர். இதனால், அந்த பெண்ணின் உடல்நலத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் விரைவாக குணமாகிவிட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு மகிழ்ச்சி காத்திருந்தது.
அந்தப் பெண்ணின் உடலில் இருந்த கொரோனா வைரஸூம், காய்ச்சலும் முற்றிலும் குணமாகி விட்டது. இதனால், விஞ்ஞானிகள் தற்பொழுது பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தாய்லாந்து அரசாங்கம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்கள், உருவாக்கிய மருந்தினை தற்பொழுது அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒரு வேளை, அவர்கள் அங்கீகரிக்கும் பட்சத்தில், இதனையே இந்த கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.