இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, இந்த ஊரடங்கு உத்தரவு தொடர உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் நடமாட்டமானது, வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது. இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களைக் கண்டுபிடிக்க, கருவிகளை புனே நகரில் அமைந்துள்ள நிறுவனம் உருவாக்கி உள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த மினால் தாக்கேவ் போசாலே தான் இந்த கருவியினை உருவாக்கி உள்ளார்.
வைரஸ் நிபுணரான அவர், புனேயில் உள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் இந்த கருவியினைக் கண்டுபிடித்து உள்ளார். அதற்கு பாத்தேடிடெக்ட் என்றும் பெயர் வைத்துள்ளார். நிறைமாதக் கர்ப்பிணியான அவர், தன்னுடையப் பிரசவத்திற்கு முந்தைய நாள் இன்று இதனைக் கண்டுபிடித்துள்ளார். இந்தக் கருவிக்கு தற்பொழுது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், கருவியினைக் கண்டுபிடித்த அடுத்த நாள், குழந்தையையும் பெற்று எடுத்து அசத்தியுள்ளார். ஜெர்மனியில் இருந்து 4500 ரூபாய்க்கு, கொரோனா வைரஸைக் கண்டுபிடிக்க, இந்தியா கருவிகளை இறக்குமதி செய்து வந்தது.
இந்நிலையில், வெறும் 1500 ரூபாயில் இதற்கான கருவி உருவாக்கப்பட்டு உள்ளதால், இதனைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், இதன் மூலம், இரண்டரை மணி நேரத்திலேயே, நோய் தொற்று இருக்கின்றதா இல்லையா எனக் கண்டுபிடித்து விட முடியும்.