பொதுமக்கள் சீரியஸாக லாக்டவுனைப் பின்பற்ற வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சரிவர, இதனைப் பின்பற்றுவதில்லை எனவும் தன்னுடைய வேதனையைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், தற்பொழுது வரை நான்கு பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இந்த வைரஸானது மேலும் பரவாமல் இருப்பதற்கு, நேற்று பொதுமக்கள் ஊரடங்கானது, இந்தியா முழுக்கக் கடைபிடிக்கப்பட்டது.
இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். யாரும் வீட்டினை விட்டு வெளியில் வரவில்லை. இந்தியா முழுவதும் அமைதியாகக் காட்சியளித்தது. இந்நிலையில், நேற்று மாலையில், அதிரடியாக ஒரு அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, இந்தியாவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக, 82 மாவடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவைகளுக்கு 144 தடை உத்தரவினைப் பிறப்பிப்பதாகவும் கூறியது. மேலும், மார்ச் 31ம் தேதி வரை இது தொடரும் எனக் கூறியும் உள்ளது. இந்நிலையில், தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் மூலம், பிரதமர் மோடி, வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
பொதுமக்கள், கோவிட்-19 பரவாமல் இருக்க, லாக்டவுனினை முறையாகப் பின்பற்ற வேண்டும். இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உதவ வேண்டும். மாநில அரசுகள், தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசாங்கம் கூறுகின்ற வழிமுறைகளை, பொதுமக்கள் சீரியஸாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி உட்பட பல நகரங்களில், பொதுமக்கள் வெளியில் வந்த பொழுது, போலீசார் அவர்களுக்கு மலர் கொத்து வழங்கியும், மரியாதை அளித்தும் வீட்டிற்குச் செல்ல அறிவுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.