நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளின், உருவத்துடன் பேசிய தாய், கண்கலங்கிய காட்சியானது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள், தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதில் முன்னணி நாடுகளாக உள்ளன. உலக வல்லரசு நாடான, அமெரிக்காவிற்கே சவால் விடும் நாடாக, இவை உள்ளன. இவைகளில், தென் கொரிய நாட்டினைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, மீட்டிங் யூ என்ற புதிய நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில், விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) எனும் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தியுள்ளது. அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இறந்துபோன நபர்களின் குடும்பத்தாரை அழைத்து, அவர்களுடன் இறந்து போனவர்களை விஆர் தொழில்நுட்பத்தின் மூலம் பேச வைத்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியானது, உலகளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அப்படி ஒரு நிகழ்வின் பொழுது, ஜாங் ஜி சிங் என்ற பெண்மணி, தன்னுடைய இறந்த குழந்தையுடன் பேச வைக்கப்பட்டார். அவர் தன்னுடைய மகள் நயோனை பார்த்ததும், கண்கலங்கி விட்டார். தன்னுடைய மகளின் அச்சாக அந்த விஆர் தொழில்நுட்பம் ஒரு பெண் குழந்தையைக் காட்டியது. அதனுடன் உரையாட பிரத்யேக ஹெட்செட் மற்றும் கையுறைகள் பயன்படுத்தப்பட்டன.
அப்பொழுது, ஜாங் ஜி சிங் முன்பு, நயோன் தோன்றினார். அவருடன், சிறிது நேரம் அழுது கொண்டே பேசினார் சிங், பின்னர், நான் உறங்கச் செல்கின்றேன் என நயோன் சென்றார். அந்த வீடியோவினை, குறும்படமாக தற்பொழுது அந்த டிவி சேனல் வெளியிட்டுள்ளது.