மும்பையில் நேற்று இரவு முதல் கனமழைப் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வட இந்தியாவின் பல மாநிலங்களில், கடந்த சில மாதங்களாக மழையானது, விட்டு விட்டுப் பெய்து வருகிறது. அதில் பல மாநிலங்களில் குறிப்பாக, பீகார், குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா உட்பட பல மாநிலங்களில், வெள்ளமே வந்தது. இந்நிலையில், ஒரு மாதமாக மழை இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
இந்நிலையில், நேற்று இரவு மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், மீண்டும் மழைப் பெய்த ஆரம்பித்துள்ளது. கடந்த 30 மணி நேரத்தில் 200மிமீ அளவிற்கு மழைப் பெய்துள்ளது. மேலும், இன்று இரவுக்கு மேல் மீண்டும் மழைப் பெய்ய வாய்ப்பு இருப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தென் குஜராத் பகுதியில், கனமழைக்கான மேகங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதால், தற்பொழுது குஜராத் மாநிலமும் கனமழையை, எதிர்நோக்கி உள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 250 மிமீ மழையும், 24 மணி நேரத்தில் 118 மிமீ மழையும் பெய்துள்ளது.
தொடர்ந்து மும்பை மாநகரம் முழுவதுமே, கரும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இன்று மும்பை மாநகரின் வியாபாரமும் மந்தமாக இருப்பதாக, அம்மாநில மக்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில், பதிவிட்டு வருகின்றனர்.