சாத்தான்குளம் கொலை வழக்கு! முத்துராஜ் அதிரடி கைது!

04 July 2020 அரசியல்
sathankulammuthuraj.jpg

சாத்தான்குளம் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசாரால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த முத்துராஜ் நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 19ம் தேதி அன்று, சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் என்பவர்களை, விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், அவர்களை கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதனால், அவர்கள் இறந்த விஷயம் நாடு முழுவதும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடிப் பிரிவிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட சாத்தான் குளம் காவல்துறையினர் நான்கு பேரினை, சிபிசிஐடிப் போலீசார் கைது செய்து தற்பொழுது சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்பட்ட முத்துராஜ் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். அவரை நேற்று விளாத்திகுளம் பகுதியில் பார்த்ததாகவும், அவர் அப்பகுதியில் சுற்றுவதாகவும், போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த போலீசார் முத்துராஜைக் கைது செய்தனர்.

பின்னர், அவரை சிபிசிஐடிப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரைக் கைப்பற்றிய சிபிசிஐடிப் பிரிவு போலீசார், அவரை மருத்துவ ஆய்விற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவரை தூத்துக்குடி மாஜிஸ்திரேட் முன்னிலையில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஐந்து காவல்களையும் தன்னுடையக் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன.

HOT NEWS