மியான்மரில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாக, மியான்மர் தலைமைத் தளபதி மின் ஆங் லயிங் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்பொழுது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது. இரண்டு நாடுகளும், லடாக் பகுதியில் தன்னுடைய இராணுவத் துருப்புகளைக் குவித்து வருகின்றது. இதனால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, இந்தியாவிற்குத் தொல்லை கொடுக்கும் வகையில், பலவித வேலைகளை சீனா கமுக்கமாக செய்து வருகின்றது.
மியான்மர் நாட்டின் தலைமைத் தளபதியான மின் ஆங் லயிங், ரஷ்யாவின் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அவர் பேசுகையில், மியான்மரில் அராக்கன் ஆர்மி, அராக்கன் ரோஹிங்கியா போன்ற தீவிரவாத அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மியான்மர் மக்களுக்கும், அரசிற்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து சீனாவினைச் சேர்ந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவர்களுக்கு சீனா ஆயுதங்களை சப்ளை செய்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், அவர்களுக்கு சீனா ஆயுதம் வழங்கி, மியான்மர் அரசிற்கும், இந்திய அரசிற்கும் எதிராக கிளர்ச்சியில் ஈடுபட தூண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என, அந்நாட்டு செய்தி ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.