வேலையின்மை, விவசாயம் மற்றும் கடன் தொல்லையின் காரணமாக 2018ம் ஆண்டு 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தேசிய குற்றம் விசாரணைப் பிரிவு (national crime investigation bureau) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதில் விவசாயத்தினால் தற்கொலை செய்து கொண்டவர்களைக் காட்டிலும், வேலையில்லாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ள அதிர்ச்சி செய்தியும் வெளியாகி உள்ளது.
வருடா வருடம், தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலை, national crime investigation bureau நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அதன்படி, 2018ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மஹாராஷ்டிரம் முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும் பிடித்துள்ளன. மேற்கு வங்கம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் 17,972 பேரும், தமிழகத்தில் 13,896 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே போல், மேற்கு வங்கத்தில் 13,225 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 11,775 பேரும், கர்நாடகத்தில் 11,561 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்திய அளவில் இந்த ஐந்து மாநிலங்களே, ஐம்பது சதவிகித தற்கொலையில் பங்கு வகிக்கின்றன.
இந்த தற்கொலைகளில், 2018ம் ஆண்டின் கணக்கின்படி, வேலை இல்லாமல் தினமும் 35 பேர் தற்கொலை செய்துள்ளனர். சுயதொழில் செய்வோர் 36 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ள, அதிர்ச்சிகரமானத் தகவல் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது என்பதை விட, வேலையில்லாமல் அதிகரித்துள்ள தற்கொலைகளே அதிகமாக உள்ளது.