நேற்று மாலை, தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றினை இயற்றியுள்ளது. அதன்படி, இனிமேல் தமிழக மக்களால், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்க இயலாது. பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் கவுன்சிலர்களே, தங்களுடைய வாக்கினை அளித்து மேயரைத் தேர்ந்தெடுக்க இயலும். ஆனால், கிராம ஊராட்சித் தலைவரை கிராம மக்களே நேரடியாகத் தேர்வு செய்யலாம். இதற்கு மறைமுகத் தேர்தல் என்று பெயர். இதனை அவசர சட்டமாக இயற்றியுள்ளது தமிழக அரசு.
இதற்கு தற்பொழுது, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், இந்த மறைமுகத் தேர்தலை திமுக நடத்தியது. இதனைத் தற்பொழுது, அவசர சட்டமாக மாற்றி, சட்ட மசோதவில் திருத்தத்தினை உருவாக்கி உள்ளது ஆளும் அதிமுக அரசு.
இதனிடையே, இந்த மறைமுகத் தேர்தல் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றார் மாநிலத் தேர்தல் ஆணையர்.