ரிபப்ளிக் டிவியின் நிறுவனரும், மீடியா சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும், அர்னாப் கோஸ்வாமியின் மீது, புதிதாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த மாதம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியினைப் பற்றி தரக் குறைவாகப் பேசியதாக, அவர் மீது காங்கிரஸ் கட்சியினர் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், அர்னாப் தான் தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் என, மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
இதனால், மொத்தம் இரண்டு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. தற்பொழுது தெற்கு மும்பையில் உள்ள நுல் பஜார் பகுதியில் தங்கியிருக்கின்ற இர்பான் அபுபக்கர் சேக் என்பவர், வழக்குப் பதிவு செய்துள்ளார். அதில், கடந்த ஏப்ரல் 14ம் தேதி அன்று, பாந்த்ராவில் உள்ள மசூதியினைச் சேர்ந்தவர்கள், வெளியூரில் வந்து வேலை செய்கின்றவர்களைத் தூண்டிவிட்டதாக கூறியுள்ளார். அவரும்(அர்னாப் கோஸ்வாமி), அவருடைய ரிபப்ளிக் டிவி சேனலும் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறியுள்ளார்.
தன்னுடைய புகாரில், அர்னாப் கோஸ்வாமி தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பினைத் தூண்டி விடுவதாகவும், இது குற்றம் எனவும் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அவர் புகார் கொடுத்து, 12 மணி நேரத்திற்குப் பிறகு, அர்னாப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, மஹாராஷ்டிராவில் சாதுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, காங்கிரஸ் கட்சியேக் காரணம் என்று அர்னாப் கூறியிருந்தார்.
இதற்காகவும், தற்பொழுது அர்னாப் கோஸ்வாமி மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், அவர் சேனலுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்குமாக அலைகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அவர் மீது, நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீசார் 12 மணி நேரத்திற்கும் மேலாக, காவல்நிலையம் வர வழைத்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.