தன்னுடைய காயமடைந்த தந்தையை, சொந்த ஊருக்கு சைக்கிளில் அமர வைத்தே பயணம் செய்து வந்த சிறுமிக்கு, பலரும் உதவிகளை வாரிவழங்கி வருகின்றனர்.
பீகாரினைச் சேர்ந்த ஜோதிகுமாரி மற்றும் அவருடைய தந்தையும், டெல்லியில் வசித்து வந்தனர். அங்கு அவருடைய தந்தை ஆட்டோ ஓட்டி வந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் வேலைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய மகளுடன் தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர்.
தான் சம்பாதித்த பணத்தினை வைத்து, சைக்கிள் வாங்கி தன்னுடைய மகளுக்கு தந்தார் தந்தை. அந்த சைக்கிளைப் பயன்படுத்தி சுமார் 1200 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, தந்தையுடன் பீகாரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு திரும்பினார் ஜோதி குமாரி. இந்த செய்தி இணையத்தில் வைரலானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவருடைய இந்த செயலைப் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
அவருடைய இந்த செயலுக்காக, பீகார் அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாயினை வழங்கி உள்ளது. ஜோதிகுமாரி என்ன படிக்க விரும்புகின்றாரோ, அதனை இலவசமாக வழங்க உள்ளதாக ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திய சைக்கிள் பெடரேஷன் அமைப்பானது, ஜோதிகுமாரிக்கு இலவச பயிற்சி வழங்க முன்வந்துள்ளது.
மேலும், ஐஐடி-ஜீ என்ற தேர்விற்கு பயிற்சியளிக்க, சூப்பர்-30 என்ற அமைப்பானது முன் வந்துள்ளது. ஜோதி குமாரி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவருக்கு இந்த உதவிகள் அனைத்தும் சென்று சேர உள்ளன.