சென்ற ஆண்டு, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதல் காரணமாக, இந்திய வீரர்கள் 40 பேர் புல்வாமா பகுதியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில், இந்திய இராணுவ மேஜர் விபூதி சங்கர் தவுந்தியால் மரணமடைந்தார். அவருடைய மனைவியான நித்திகா கவுல் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரிய தேர்ச்சி பெற்றுள்ளார். 28 வயதுடைய கவுல் தற்பொழுது, பணி நியமன ஆணைக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் கூறுகையில், என்னுடைய கணவர் இறந்த பின், என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. அவருடைய சோகத்தினை மறக்க, அவர் இறந்த பத்தாவது நாளே நான் வேலைக்குச் சென்றுவிட்டேன். நான் பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகின்றேன். அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. மிகவும் குழப்பமாக இருந்தது. அப்பொழுது தான், என் கணவரின் வழியில் நானும் செல்லலாம் என தீர்மானித்தேன்.
என் கணவர் மிகவும் ஒழுக்கமானவர். அந்த ஒழுக்கம், இராணுவத்தின் மூலமே வந்திருக்க இயலும். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவள். அவர் தன்னுடைய நாட்டிற்காக உயிரினைத் துறந்தார். அவரைப் போல, நானும் என்னுடைய உயிரினை நாட்டிற்கு தர முடிவு செய்தேன். கடந்த ஆண்டு, எஸ்எஸ்சி தேர்வு நடைபெற்றது. அதற்கு படிக்கலாம் என நினைத்த நாள் தான், என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
இனி, இது தான் வாழ்க்கை என இறங்கிப் படித்தேன். என்னுடைய தாய் எனக்கு ஆதரவு அளித்தார்கள். தேர்வு எழுதும் நாள் மிகவும் படபடப்பாக இருந்தது. இருப்பினும், குறிக்கோளை அடைய வேண்டும் என்கின்ற நோக்கில், தேர்வினை சந்தித்தேன். தற்பொழுது தேர்ச்சி பெற்றுவிட்டேன். நான் டெல்லியில் வசித்து வருகின்றேன். இராணுவத்தில் சேர்வதற்காக, என்னுடைய ஐடி வேலையினை விட்டுவிட்டேன் என்று பெருமிதத்துடன் கூறுகின்றார் நித்தி கவுல்.