மத்திய அரசு, நித்தியானந்தாவினை தீவிரமாகத் தேடி வருகின்றது. ஆனால், அது பற்றி எல்லாம் நித்தி கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து, தன்னுடைய பிரசங்க வீடியோக்களை சாதாரணமாக வெளியிட்டு வருகின்றார். அனைத்திற்கும் மேல், தனக்காக ஒரு நாட்டினை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.
அவருடைய பக்தர்களும் சரி, சீடர்களும் இன்னும் அவருக்கு ஆதரவளித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் சித்தார்த், நித்தியானந்தா மீது கடும் விமர்சனத்தினை வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், நித்தியானந்தாவின் சிஷ்யை சித்தார்த்திற்கு எதிராக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நித்தியானந்தாவின் சிஷ்யை வீடியோவில் பேசுகையில், நித்தியானந்தாவினைப் பற்றி நடிகர் சித்தார்த் அவதூறாகப் பேசியுள்ளார். சித்தார்த்திற்கு சுவாமியைப் பற்றி என்ன தெரியும். அவரிடம் உரையாடி உள்ளாரா, ஆசிரமம் வந்துள்ளாரா, உபன்யாசத்தைக் கேட்டுள்ளாரா? எதுவும் கிடையாது. பாலியல் குற்றவாளி, கற்பழித்தவர் எனக் கூறுகின்றார். நித்தியானந்தா மீது, யாராவது இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்களா? அவர் மீது எவ்வித அவதூறும் கிடையாது.
அவர் இந்து மதத்தினைச் சேர்ந்த, ஒரு ஆன்மீக குரு. அவரை நம்பும் பக்தர்களையும், சீடர்களையும் சித்தார்த் கேவலப்படுத்துகின்றார். நமக்குப் பிடிக்காவிட்டால், அமைதியாக இருப்பது தான் நம்முடைய கலாச்சாரம் நமக்குக் கற்றுக் கொடுத்தது. தயவு செய்து இனி அவ்வாறு அவதூறாகப் பேச வேண்டாம். நாங்கள் அவ்வாறு பேசுவதற்கு விரும்புவதில்லை எனக் கூறியுள்ளார் அந்த பெண் சீடர்.