இந்தியாவிலேயே முதன் முதலாக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளாவில், புதிய பாதிப்புகள் எதுவும் கடந்த இரண்டு நாட்களாக பதிவாகவில்லை.
இந்தியா முழுவதும், தற்பொழுது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது தமிழகம், மஹாராஷ்டிரம், குஜராத், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தான், இந்த பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.
இந்தியாவில் தற்பொழுது 46,440 பேர் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். 1569 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். கேரளாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்து 499 பேரில், கடந்த திங்கட்கிழமையுடன் சேர்த்து, மொத்தமாக 462 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி இருக்கின்றனர்.
34 பேர் மட்டும், கேரள மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நோய்க்கான சிகிச்சையினைப் பெற்று வருகின்றனர். கேரளாவின் முக்கிய பகுதிகளான திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர்.
கன்னூரில் 18 பேரும், கோட்டயம் பகுதியில் 6 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, இரண்டு நாட்களாக புதிய கொரோனா தொற்று உள்ளவர்கள், கண்டறியப்படவில்லை. இதனால், கேரளா கிட்டத்தட்ட நோய் பரவுதலில் இருந்து மீண்டுவிட்டதாக கருதப்படுகின்றது.