கொரோனா வைரஸ் இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், வடகொரியாவில் அதிகாரி ஒருவர், சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரியாவில், அதிபர் கிம் ஜோங் உன்னின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அவருடைய ஆட்சியில், அமெரிக்காவிற்கு எதிராக தொடர்ந்து போர் பயிற்சி மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்நாட்டின் இராணுவ உயரதிகாரி ஒருவர், சமீபத்தில் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். அவர் உடலில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கின்றதா என, வட கொரிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். பின்னர், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் பொது குளியலறையைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை அவ்வாறு செய்யக் கூடாது என, ஏற்கனவே இராணுவத்தினர் எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில், அவர் அதனை மீறியதால் அவரைக் கைது செய்த இராணுவத்தினர், அவரை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. வட கொரியாவில், சட்டதிட்டங்கள் மிகக் கடுமையாக இருக்கும். அங்குள்ள சட்ட திட்டங்களைப் பின்பற்றாவிட்டால், கடுமையானத் தண்டனைகள் விதிக்கபடுவது வாடிக்கையான விஷயம் ஆகும்.