இந்தியாவின் முன்னணி மொபைல் நிறுவனமான விவோ மீது, புதிய புகார் ஒன்று எழுந்துள்ளது. அந்த நிறுவனத்தின் மீது தற்பொழுது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அனைத்து மொபைல் போன்களுக்கும், அதன் அடையாளமாக ஐஎம்ஈஐ எண்கள் வழங்கப்படுகின்றன. அவைகள் இல்லாமல் உருவாக்கப்படும் மற்றும் விற்கப்படும் மொபைல் போன்களை தடை செய்துள்ளது மத்திய அரசு. மீறி, ஐஎம்ஈஐ நம்பர் இல்லாத மொபைல் போன்களைப் பயன்படுத்தினால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர், தனது விவோ மொபைலில் ஒரு ஐஎம்ஈஐ நம்பரும், பெட்டியில் ஒரு ஐஎம்ஈஐ நம்பரும் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். இதனைத் தொடர்ந்து, உபி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரகசியமாக, கடந்த ஐந்து மாதங்களாக விசாரணை செய்தனர்.
அதில், கிட்டத்தட்ட 13500 ஸ்மார்ட்போன்களுக்கு ஒரே ஐஎம்ஈஐ நம்பர் வழங்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. தற்பொழுது விவோ நிறுவனத்தின் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இந்தியாவின் சட்டமாகும்.