தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனையொட்டி, இன்று மாலை (24-03-2020) முதல் மார்ச் 31ம் தேதி வரை, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸானது பரவி வருகின்றது என்றார். மேலும், அவர் பேசுகையில் மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான மாஸ்க்குகள் தேவைக்கு ஏற்ப உள்ளது எனவும், மக்கள் அச்சப்படத் தேவையில்ல எனவும் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு, ஒரு மாத சிறப்பு ஊதியமானது வழங்கப்படும் எனவும், காலியாக உள்ள 3000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார்.
மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 54 வயதுடைய நபருக்கு, ஏற்கனவே நுரையீரல் தொற்று இருப்பதாகவும் அதனால், அவரால் போதிய அளவிலான ஆக்சிஜனை கிரகிக்க முடியவில்லை எனவும், அவர் கடைசியாக 60 பேர் கலந்து கொண்ட விழாவில் கலந்து கொண்டார் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதனால், மதுரை மாநகராட்சி சார்பில், அவர்களுடையப் பெயர்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது எனவும், அவர்களும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் தெரிவித்தார்.