ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு சிபிஐயின் விசாரணையில் உள்ளார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம். அவருடைய ஜாமீனை சென்ற 20ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவருடைய வீட்டில் ஏறி குதித்து கைது செய்தது சிபிஐ.
இதனைத் தொடர்ந்து அவர், சிபிஐ காவலில் விசாரணையில் உள்ளார். அவரை விசாரிக்க அனுமதி கோரினர். அதற்கு 30ம் தேதி வரை, அனுமதி வழங்கினார் நீதிபதி. இந்நிலையில், மீண்டும் 5 நாட்கள் விசாரணையை நீட்டிக்க, அனுமதி கோரியது சிபிஐ. அதற்கு செப்டம்பர் 2ம் தேதி வரை, அனுமதி அளித்தார் நீதிபதி. இதனால், சிபிஐயின் விசாரணையில் இருந்தார் திரு. ப.சிதம்பரம்.
இந்நிலையில், இன்று காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ப. சிதம்பரத்தின் சார்பாக, வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார். அப்பொழுது, பேசிய அவர், சிதம்பரத்திற்கு 74 வயதாவதால், இனியும் விசாரணைக் காவலை நீட்டிக்கக் கூடாது. அவரை திகார் சிறையில் அடைத்து விசாரிக்கவும் கூடாது எனவும் வாதாடினார். இதனை அடுத்து, இன்று மாலை அவருடைய வழக்கினை மீண்டும் விசாரிக்கிறது நீதிமன்றம். இதற்கிடையில், நீதிமன்றம் மறுத்துவிட்டால், அவரை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.