சிதம்பரத்திற்கு 24ம் தேதி வரை காவல்!

18 October 2019 அரசியல்
pchidambarm.jpg

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தினை வரும் 24ம் தேதி வரை, விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது உயர்நீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தற்பொழுது திகார் சிறையில் உள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப சிதம்பரம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் கடந்த திங்கட்கிழமை விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், அவரை அதிரடியாக கைது செய்தனர். இருப்பினும், அவரை திகார் சிறையிலேயே வைத்து விசாரிக்க சிபிஐ கூறியது.

இதனைத் தொடர்ந்து, அவரை தங்களுடன் அழைத்துச் சென்று விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது அமலாக்கத் துறை. அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, நிபந்தனைகளுடன் வரும் அக்டோபர் 24ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, அவரை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், சிதம்பரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கண்ணாடி, வீட்டு சாப்பாடு, மருந்துகள், தனி அறை மற்றும் வெஸ்டர்ன் டாய்லட் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, தினமும் அரை மணி நேரம், அவருடைய குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், அமலாக்கத்துறையின் விசாரணைக்காக, நேற்று திகார் சிறையில் இருந்து, குற்றவாளிகளை அழைத்துச் செல்லும் வாகனத்தில், 74 வயதுடைய ப சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார்.

HOT NEWS