பிலிப்பைன்ஸ் நாட்டினைத் தாக்கிய பான்போன் சூறாவளியால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு, இந்த புயலானது வலுவடைந்துள்ளது. மணிக்கு 195 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். பல காரக்ள் தூக்கி வீசப்பட்டன. இருப்பினும், பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படவில்லை. இந்தப் புயல் குறித்து, முன் கூட்டியே அரசு எச்சரித்ததால் பொதுமக்கள் உஷார் அடைந்தனர்.
இருப்பினும், இவ்வளவு வலிமையான சூறாவளியினைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்தனர். தொடர்ந்து, மழையும் பெய்து வருவதால், பலரும் தங்களுடைய வீடுகளை விட்டுவிட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலர் தங்களுடைய வீடுகளை இழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா துறைமுகத்தில் தற்பொழுது 25,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கப்பல் மூலம் வெளியூர் செல்லத் திட்டமிட்டு இருந்தனர். இருப்பினும், சூறாவளி காற்று மற்றும் கனமழைக் காரணமாக, அவர்களால், வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல இயலவில்லை.
அவர்களும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால், அனைவரும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.