பள்ளிகளில் இனி தினமும், காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி வகுப்புகள் நடைபெற வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வாரம் இரு முறை விளையாட்டு பயிற்சி வகுப்புகள் (பிடி) நடைபெற்று வருகின்றன. குழந்தைகள் வெளியில் சென்று விளையாட முடியாத அளவிற்கு மக்கள் தொகைப் பெருகிவிட்டது.
மேலும், படிக்கின்ற குழந்தைகள், கையில் வைத்துள்ள மொபைல் போன்களில் உள்ள கேம்களை மட்டுமே விளையாடுவதால், அவர்களுடைய உடல்திறன் குறைகின்றது. இதனால், படிப்பில் மந்தத் தன்மையும் ஏற்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, இனி தினமும் விளையாட்டிற்காக நேரம் ஒதுக்க தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இனி பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு, காலையில் வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன், 15 நிமிடமும், மாலையில் 45 நிமிடமும் உடற்பயிற்சி, உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என அறிவித்துள்ளது.