கேரளாவில் இறந்த கர்ப்பிணி யானைக்கு, தேங்காயில் வெடி மருந்து கலந்து கொடுத்த விஷயம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள சைலன்ட் வேலி என்றப் பகுதியில், குளத்திற்குள் நின்று கொண்டிருந்த யானையானது மரணமடைந்தது. அந்த சம்பவம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. அதற்கு அண்ணாச்சிப் பழத்திற்குள் வெடிமருந்து நிரப்பி, உண்ணக் கொடுத்ததாக முதலில் கூறப்பட்டது. அதனை உண்ணும் பொழுது, அது யானையின் வாயில் வெடித்துள்ளது.
இதனால், அந்த யானையின் தாடைக் கிழிந்துவிட்டது. இதனிடையே, அந்த காயத்தினை ஆற்றுவதற்காக கிட்டத்தட்ட உணவேதும் எடுத்துக் கொள்ளாமல், இரண்டு வாரங்களுக்கும் மேலாக, அந்த யானை ஒரு குளத்திற்குள் நின்று கொண்டே இருந்துள்ளது. தொடர்ந்து அதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் அதனை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த யானை கீழே விழுந்து மரணமடைந்தது.
இந்த சம்பவம், உலகளவில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணையை கேரள போலீசார் செய்து வருகின்றனர். இதுவரை பண்ணைத் தொழிலாள் வில்சன் என்பவரை, கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே அந்த யானையின் உடலானது, ஆய்வு செய்யப்பட்டது.
அதில், அந்த யானைக்கு அண்ணாச்சிப் பழம் வழங்கப்பட வில்லை. மாறாக, அந்த யானைக்கு தேங்காயில் வெடிமருந்து நிரப்பி கொடுக்கப்பட்டு உள்ளது. இதனைத் தான் அந்த கர்ப்பிணி யானைக் கடித்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.