இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவி, தற்பொழுது முகக் கவசம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், கூறப்பட்டு உள்ளது. இதனால், முகக் கவசத்திற்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில், இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவி, சவிதா கோவிந்த் தற்பொழுது முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். இதற்காக, தையல் மெஷினில் உட்கார்ந்து தைத்துக் கொண்டு இருக்கின்றார். அவர் தைக்கும் முகக் கவசங்கள், டெல்லியில் உள்ள கஷ்டப்படும் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இதிலிருந்து அனைவருமே, தங்களால் இயன்ற வகையில் இந்த கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராட வேண்டும் என அவர் கூறுகின்றார் என, குடியரசுத் தலைவர் மாளிகை கூறியுள்ளது.