பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேசிய குடியுரிமை மசோதாவிற்கு, தற்பொழுது நாடு முழுவதும் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு, அம்மாநிலங்களில் போராட்டம் கடுமையாக நடைபெற்று வருகின்றது. பல மாவட்டங்களில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பலத் தலைவர்களும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் செல்வி. மம்தா பேனர்ஜி இந்த மசோதாவினை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராய் விஜயனும் இந்த சட்டத்தினை கேரளாவில் அமல்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தினை அமல்படுத்த முடியாது என, அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், இந்தியாவின் மதச்சார்பின்மை மீதான நேரடியானத் தாக்குதல் இது எனவும், இதனை பஞ்சாப் மாநில அரசு அமல்படுத்தாது எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.