நரிக்குறவர்களுக்காக உதவி செய்யும் ராகவா லாரன்ஸ்!

15 May 2020 சினிமா
raghavalawrence19.jpg

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்பொழுது உணவில்லாமல் தவித்து வருகின்ற நரிக்குறவர்களுக்கும், உதவி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரானது தற்பொழுது மே-17ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், பலரும் தங்களுடைய உணவிற்காக கஷ்டப்படுகின்றனர். ரேசன் கார்டுகள் இல்லாதவர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் நரிக்குறவர்கள் எனப் பலருக்கும் சரியான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது கிடையாது.

அவர்கள் தங்களுடைய வீடியோ பதிவின் மூலம், உதவி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை எனவும், மூன்று வேலை உணவுக்கு கூட பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது எனவும் கூறியுள்ளனர். நரிக்குறவப் பெண்கள் அந்த வீடியோவில் பேசுகையில், எங்களுக்கு குழந்தைகள் உள்ளன.

ஊரடங்கின் காரணமாக, எங்களால் வெளியில் செல்ல இயலவில்லை. தற்பொழுது உணவிற்கே கஷ்டப்படுகின்றோம். எனவே, தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். எங்களுக்கு ரேஷன்கார்டு கிடையாது. அரசாங்கம் வழங்கும் பொருட்களை எங்களால், வாங்க இயலாது. எனவே, தயவு செய்து யாராவது உதவுங்கள் எனக் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள லாரன்ஸ், இவர்களுக்குத் தான் உதவி செய்ய உள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே, உதவிகளை செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். மேலும், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல அமைப்புகளுக்கு, சத்தம் இல்லாமல் உதவி செய்தும் உள்ளார். தற்பொழுது நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

HOT NEWS